search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மழை"

    • மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
    • தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று காலை சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

    இந்த மழைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் அதிகமான குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழு சுழி தடுப்பணையில் அணை நிரம்பி, கசிவு ஏற்பட்டது. இதையறிந்ததும் மருதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு கருதி அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக 50-க்கும் அதிகமான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    நேற்று நள்ளிரவு மீண்டும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில் கொட்டிய கனமழைக்கு இரும்பறை முதல் சிறுமுகை செல்லும் சாலையில் மேடூர் என்ற பகுதியில் மழைநீர் கடல் நீரை போல சாலைகள் தெரியாத அளவுக்கு மூழ்கடித்தபடி சென்றது.

    இந்த சாலையினை 50 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    இலுப்பநத்தம் ஊராட்சியில் உள்ள அன்னதாசம்பாளையம் கிராமத்தில் பெய்த மழைக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தாமோதரன் ஆகியோர் பயிரிட்டிருந்த 10 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.

    சில வாழைகள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கனமழைக்கு அண்ணாநகர் சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மிதந்தன. தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மக்கள் வீட்டில் உள்ள வாளி, பாத்திரங்களை வைத்து, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இரும்பறை முதல் சிறுமுகை சாலையில் மேடூர் என்ற இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், கணபதி, ரெயில் நிலையம், டவுன்ஹால், உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்தி பார்க், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.

    இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    பீளமேடு பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சில இடங்களில் தேங்கியும் நின்றது.

    கனமழைக்கு நஞ்சுண்டாபுரம் ராமலிங்கம் ஜோதிநகர், சுங்கம் சிவராம் நகர், பீளமேடு வரதராஜபுரம், சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    நள்ளிரவில் கொட்டிய கனமழையால் உடையாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.

    நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அங்கிருந்த மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் உடையாம்பாளையம் கக்கன் நகர் பகுதியில் கார் ஒன்று மழைவெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் 3 பேர் சிக்கியிருந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.

    ×